Skip to main content

இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் - வில்வித்தையில் அசத்திய ஹர்விந்தர் சிங்!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

harvinder singh

 

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. இன்று நடைபெற்ற போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.

 

இன்று  (03.09.2021) நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோல் ஏற்கனவே 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றிருந்த அவனி லெகாரா, இன்று நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார்.

 

இதன் தொடர்ச்சியாக தற்போது ஹர்விந்தர் சிங், ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தையில் வெண்கலம் வென்று சந்தித்துள்ளார். இது இன்றைய நாளில் இந்தியா வெல்லும் மூன்றாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

Government job for Mariappan Thangavelu!

 

பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப்-1 பணிக்கான அரசு வேலையை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (03/11/2021) நடந்த நிகழ்ச்சியில், சர்வதேச உயரம் தாண்டுதல் போட்டிகளில் பதக்கம் வென்ற தங்கவேலு மாரியப்பனுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் கரூர் மாவட்டம், புகளூர் காகிதபுரத்தில் உள்ள காகித ஆலையில் 'துணை மேலாளர் (விற்பனை)' பதவிக்கான பணி நியமன ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

 

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தொழில்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

 

"எனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் அரசு வேலை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று மாரியப்பன் தங்கவேலு தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

பாராலிம்பிக்ஸ் குழுவை சந்தித்த பிரதமர் மோடி!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

pm modi

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை வென்று சாதித்தனர். ஐந்து தங்கப் பதக்கங்களோடு மொத்தமாக 19 பதக்கங்களை வென்று இந்திய பாராலிம்பிக்ஸ் வீரர்கள் அசத்தினர்.

 

இந்தநிலையில், பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு நேற்று (08.09.2021) பாராட்டு விழா நடைபெற்றது. அதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் தற்போதைய சட்டத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களைக் கவுரவித்தனர்.

 

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, பாராலிம்பிக்ஸில் கலந்துகொண்ட இந்திய குழுவை இன்று தனது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் வீரர் / வீராங்கனைகளுடன் கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.