Skip to main content

தேசியகீதத்திற்கு இணையாக ’"நீராரும் கடலுடுத்த'’ கொடுத்த கலைஞர் !

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

கலைஞர், ஒரு மாபெரும் சகாப்தம். பூமிக்கு ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு நிலவு என்பது போல், அவருக்கு நிகர் அவர் மட்டும் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு.

"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்’

-என்ற குறளுக்கு, ’அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்’ என்று கலைஞர் உரை எழுதினார். அவரது உரைப்படி, சான்றாண்மைக்குரியவர் கலைஞர்தான் என்பதை இந்தக் குறள் உணர்த்துகிறது. எத்தனையோ கலை விற்பன்னர்களும் தலைவர்களும் இங்கே இருக்கலாம். என்றாலும், ஒட்டுமொத்த இந்தியாவிற்குமாக இருக்கும் பல்வகைத் திறன்கொண்ட ஒரே தலைவர், ஒரே கலைஞர், நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

 

kalaingar with anna



திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக, 1969 ஜூலை 27-ல் பொறுப்பேற்றார் கலைஞர். இந்த கிரீடத்தை அவர் சுமக்க ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகின்றன. எத்தனையோ சோதனைகள் வந்தபோதும், கட்சியை இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காத்து, தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைமைப் பதவியிலே தொடர்கிறார். இன்று அதற்கான பொன்விழாவைத் தி.மு.க. உணர்வோடு கொண்டாடுகிறது. இப்படியொரு பெருமை கலைஞரைத் தவிர இந்தியாவில் வேறு எந்தத் தலைவருக்கும் வாய்க்கவில்லை.

 

kalaingar



அவர் மாணவப் பருவத்தில் தொடங்கி, தன் தலையிலே தூக்கிச் சுமந்த முரசொலிலி, 75 -ஆம் ஆண்டு பவள விழாவை அண்மையிலே கண்டது. 13 முறை சட்டமன்றத் தேர்தலிலே நின்று அத்தனை முறையும் வெற்றிபெற்று ஏறத்தாழ 60 ஆண்டுகள் சட்டமன்ற அனுபவத்தைக் கொண்ட ஒரே தலைவராகவும் கலைஞரே திகழ்கிறார். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கிறது. எத்தனையோ முதல்வர்கள் தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள். ஆனால், கலைஞரைப்போல், எல்லாத் துறையிலும் சாதித்த ஓர் ஆற்றல் வாய்ந்த முதல்வரை இதுவரை நாடு பார்த்ததில்லை. 1967-ல் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற அறிஞர் அண்ணா 69-ல் மறைந்தார்.

1969 பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட கலைஞர் அவர்கள், 69-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 என 5 முறை முதல்வராகி, தனது திராவிட ஆட்சியால், சமூக நீதிக்காகவும் சமூக நலனுக்காகவும் தன்னால் இயன்றதையெல்லாம் செய்திருக்கிறார். படிக்கவும் படிப்பின்மூலம் உயரவும் வழிதெரியாமல் இருந்த தமிழகத்தை அப்படியே விடியலை நோக்கி நகர்த்தி வந்த தனிப்பெருந்தலைவர் கலைஞராவார். கலைஞர் என்ற பிரம்மாண்டத்தின் ஒளிச்சிதறல், இந்திய வரலாற்றில் பலமாக சுடர்ந்துகொண்டிருக்கிறது.


தமிழ்நாட்டின் எங்கோ ஓர் மூலையில் இருக்கும் திருக்குவளை என்ற குக்கிராமத்திலே 1924 ஜூன் 3-ல் பிறந்து, இன்று தமிழகத்தின் தலையெழுத்தை, தந்தை பெரியாரோடும் அறிஞர் அண்ணா வோடும் இணைந்து நின்று திருத்திய மாமனிதர்தான் நம் கலைஞர். அவரது பெயர் தமிழக விடியலுக்கான மந்திரச்சொல்லாக மாறியிருக்கிறது என்றால், அதற்காக அவர் நடத்திய பயணமும், சிந்திய வியர்வையும் சந்தித்த போராட்டமும் சொல்லி மாளாதவை.

 

aringar anna

அண்ணாவிற்குப் பிறகு 1969 பிப்ரவரி 10-ல் முதன்முதலாக முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார் கலைஞர். தமிழ்ச் சமூகமும் தமிழகமும் விறுவிறுவென விடிய ஆரம்பித்தது. சரித்திரச் சாதனைகள் அணிவகுக்க ஆரம்பித்தன. தேசியகீதத்திற்கு இணையாக ’"நீராரும் கடலுடுத்த'’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்தை, 1972-ல் இருந்து தமிழகம் முழுக்க ஒலிலிக்கச் செய்தார். குடிசைகள் இல்லாத் தமிழகத்தை உருவாக்க, குடிசை மாற்றுவாரியம், மனிதரை மனிதர் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாத் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், தொழுநோய் ஒழிப்புத்திட்டம், இலவசக் கண்ணொளித் திட்டம், விதவைத் திருமண உதவித் திட்டம், கலப்புத் திருமண உதவித் திட்டம், நில உச்சவரம்பு சட்டம், கல்லூரிப் படிப்புவரை இலவசக் கல்வி, ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்று ஏழைகளை நோக்கி அரசுத் திட்டங்கள் பாய்ந்து, மக்கள் மனதில் பசுமையைத் தழைக்கச் செய்தன.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.