Skip to main content

இரத்தசோகைக்கு தீர்வு என்ன? - ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்கம்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

 Dr Arthi | Homeopathy | Health care

 

இரத்த சோகை குறித்தும் அதன் தீர்வு குறித்தும் ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்

 

இரத்த சோகை என்றாலே உடலில் இரத்தம் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஹீமோகுளோபினை வைத்து தான் இதை நாம் கண்டறிய முடியும். இரத்த சோகை இருப்பவர்கள் எப்போதும் பலவீனமாக இருப்பது போல் உணர்வார்கள். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அவர்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு இரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கும். 

 

இரத்த இழப்பு காரணமாகவும் இரத்த சோகை ஏற்படும். முடி உதிர்தல், நெஞ்சு படபடப்பு ஏற்படுதல், இதயத்துடிப்பு சீரான நிலையில் இல்லாமல் இருத்தல், தலைசுற்றல், எப்போதும் தூக்க நிலையில் இருத்தல் போன்ற பல்வேறு அறிகுறிகள் இரத்த சோகை நோய்க்கு உண்டு. பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படும். ஆண்களுக்கு சர்க்கரை, சிறுநீரக நோய், கேன்சர், அல்சர் போன்ற நோய்கள் இருக்கும்போது இரத்த சோகை ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலத்தை சமாளிப்பது கடினமாக இருக்கும். 

 

இந்த நோயால் மிகவும் சோர்வாக உணரும்போது யாராவது கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால் நிச்சயம் கோபம் வரும். இரத்த சோகை இருப்பவர்களுக்கு தூக்கம் அதிகமாக வரும். உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஹீமோகுளோபின் செல்லாமல் இருப்பதே இதற்கான காரணம். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைக் கீரையை உணவாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிடலாம். நாம் வெட்டிய உடனேயே கருத்துவிடும் காய்கறிகளும் பழங்களும் இரும்புச்சத்து அதிகம் உள்ளவை. அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

அத்திப்பழம், பேரிச்சம்பழம், பாதாம், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை சாப்பிடுவது நல்லது. ராகி, சாமை, தேன் நெல்லிக்காய் ஆகியவை நல்லது. மட்டனில் உள்ள சுவரொட்டி மிகவும் நல்லது. ஆட்டு ரத்தம், மீன் ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். முடிந்த அளவுக்கு நிறைய காய்கறிகள், பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நாம் கவனிக்காமல் விட்டால் மரணம் வரை கூட செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே அதிக சோர்வாக உணர்ந்தால் நிச்சயமாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.