
உக்ரைனில் போர் பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்துச் செல்வதற்கான பணிகளை வெளிநாட்டு தூதரகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. அந்த வகையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவ்வப்போது அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, கேள்வி, பதில் வடிவில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உக்ரைனில் விமான டிக்கெட்டுகளை ஆராய்ந்து நம்பத்தகுந்த இடங்களில் பெற வேண்டும். உக்ரைனில் இருந்து நாடு திரும்ப விமானங்கள் போதிய அளவில் இயக்கப்படுகின்றன. உக்ரைனில் இருந்து ஷார்ஜா, துபாய், தோஹா வழியாக இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, தூதரக சேவை தொடர்பான மேலும் விவரங்களுக்கு தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம். மேலும், உக்ரைனுக்கான இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தை அவ்வப்போது பார்க்க வேண்டும்.
தூதரக உதவித் தேவைப்படும் இந்தியர்கள் 24 மணி நேரமும் இயங்கும் +380 997300483, +380 997300428 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம். அதேபோல், cons1.kyiv@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.