Skip to main content

“3 வருடங்களாகப் பேச முடியவில்லை..” - மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

woman was unable to speak due to a thyroid problem

 

கோவை மாவட்டம் சவுரிபாளையம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சோபியா. இவரது கணவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சோபியாவின் கணவருக்குக் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் இவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், சோபியாவிற்கு கடந்த சில ஆண்டுகளாக தைராய்டு பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதனை சரிசெய்வதற்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். 

 

அப்போது, சோபியாவிற்கு ஏற்பட்ட தைராய்டு கட்டியை அகற்றுவதற்காக மருத்துவர்கள் சோபியாவிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால், கெடுவாய்ப்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாளில் இருந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.

 

இதையடுத்து சோபியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூச்சு விட வேண்டும் என்பதற்காக கழுத்தில் ஒரு குழாய் அமைத்தனர். ஆனால், சோபியா மூக்கு வழியாக சுவாசிக்கும் தன்மையை முழுவதுமாக இழந்துள்ளார். இதுபற்றி மருத்துவர்களிடம் கேட்டபோது, “மூச்சுக்குழாயில் உள்ள நரம்பு அறுந்துவிட்டது. இந்தப் பிரச்சனையெல்லாம் 3 மாதங்களில் சரியாகிவிடும்” என ஆறுதல் கூறியுள்ளனர். இதையடுத்து 3 வருடங்கள் ஆகியும் சோபியாவின் இந்தப் பிரச்சனை தீரவில்லை. மேலும், கழுத்தில் குழாய் அமைத்ததால் பேச முடியாமல் தவித்தும் வருகிறார். 

 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் சோபியா மனு அளித்துள்ளார். இதுகுறித்து சோபியாவின் கணவர் பேசும்போது, “நாங்க ரொம்ப கஷ்டப்படுகிற குடும்பம். என்னோட மனைவிக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு மருத்துவ உதவியும் செய்யணும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.