Skip to main content

முன்னாள் ராணுவ வீரரை கூலிப்படை உதவியுடன் கொலை செய்த மனைவி! 

Published on 08/07/2021 | Edited on 08/07/2021
Wife who killed ex-soldier with mercenary help

 

நாமக்கல் அருகே, மனைவியின் தவறான தொடர்பைக் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி, கூலிப்படையை ஏவி முன்னாள் ராணுவ வீரரை திட்டம்போட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் சிவகுமார் (42). ராணுவத்தில் பணியாற்றிவந்த இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஓய்வுபெற்றார். இவருடைய மனைவி பார்கவி (28). சொந்த ஊரில் மனைவி, குடும்பத்துடன் சிவகுமார் வசித்துவந்தார். ஜூலை 5ஆம் தேதி இரவு, நல்லையம்பட்டியில் உள்ள தனது சகோதரி சித்ராவின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவதாக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றார்.

 

குமரிபாளையம் பனங்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்தனர். சிவகுமார் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மோகனூர் காவல் நிலைய காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட சிவகுமாரின் மனைவிக்கு வெளியே ஒருவருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதும், அதனாலேயே இந்தக் கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. சிவகுமார், ராணுவத்தில் பணியாற்றிவந்தபோது பார்கவி, உள்ளூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் நெருங்கிப் பழகிவந்துள்ளார்.

 

ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சொந்த ஊர் திரும்பிய சிவகுமாருக்கு, மனைவியின் தவறான தொடர்பு பற்றி தெரியவந்தது. ஆரம்பத்தில் மனைவியை லேசாக கண்டித்துவந்தார் சிவகுமார். ஆனால், பார்கவி மீண்டும் மீண்டும் தொடர்பை வளர்த்துவந்துள்ளார். இதனால் மனைவியை அவர் அடிக்கடி அடித்து உதைத்துள்ளார். கணவர் உயிருடன் இருக்கும்வரை செல்வராஜூடனான தொடர்பை தொடர முடியாது எனக் கருதிய பார்கவி, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதுகுறித்து செல்வராஜிடமும் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் கூலிப்படையை வைத்து சிவகுமாரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளனர். இதற்காகவே தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பார்கவியும் செல்வராஜும், கடந்த 5ஆம் தேதியன்று சிவகுமார் இரவு நேரத்தில் தனியாக அவருடைய சகோதரி வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள்.  

 

இச்சம்பவம் தொடர்பாக பார்கவி, செல்வராஜ் ஆகியோரை உடனடியாக தூக்கிய காவல்துறையினர், தொடர்ந்து அவர்களிடம் துருவித் துருவி விசாரித்துவருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர். திருமண உறவுக்கு வெளியே ஏற்பட்ட தவறான உறவால் முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவம் ராசிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.