Skip to main content

குண்டர் சட்டத்தை எதிர்த்து சித்த மருத்துவர் தணிகாசலம் மனு தாக்கல்!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020
Thankaichalam filed a petition against the thug act

 

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்த மருத்துவர் தணிகாசலம் மனு தாக்கல் செய்துள்ளார்.


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம், கரோனா நோய் தொற்றுக்கு, தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயை குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் அவர் பேசும் காட்சிகள் பரவின.

 

இதனை தொடர்ந்து,  உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக தணிகாசலம் மீது வழக்கு பதிவு செய்த சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.


மேலும் புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து, அவர்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில், தந்தை கலியபெருமாள் மனு  தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தான் ஒரு பாரம்பரிய மருத்துவர் என்றும், கடலூர் வருவாய் துறை தனக்கு முறையான சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே தான் தெரிவித்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  தன்னுடைய சிகிச்சையால் யாருக்கும் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தான் கூறிய கருத்துகளை காவல்துறை தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னை குண்டர் சட்டத்தில் அடைக்க பின்பற்றப்பட்ட நடைமுறைகளில் விதிமீறல்கள் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்