Skip to main content

உயரும் நூல் விலை... வியாபாரிகள் கடையடைப்பு!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

TEXTILE YARN PRICE RAISED ERODE TEXTILES OWNERS

 

ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பிரதான தொழிலாக இருப்பது ஜவுளி தொழில்தான். இதற்கு அடிப்படை தேவையாக உள்ளது நூல்தான். அதன் விலை கடந்த ஆறு மாத காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு போல தொடர்ந்து 30% முதல் 40% உயர்ந்து விட்டது. இதனால் ஜவுளித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இந்த நூல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஜவுளித் தொழில் புரிவோர் மற்றும் வியாபாரம் செய்வோர் இன்று (18/03/2021) ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த கடையடைப்புப் போராட்டத்தால், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், ஒரு நாள் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, கடந்த மாதத்தில் கடையடைப்பு நடத்த ஜவுளித் தொழில் நடத்தும் சங்கத்தினர் திட்டமிட்டிருந்தனர். இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், நல்ல சுமூகமான முறையில் முடிவு எடுத்துத் தருகிறோம் என அ.தி.மு.க.வினர் கூறியதால், கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

 

ஆனால், இவர்களது கோரிக்கைகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதனால் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஜவுளித் தொழிலைக் காப்பாற்ற வேண்டி, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.