புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இன்று நகர்மன்ற, பேரூராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது.
மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளும், ஏழு பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. அதனால் அங்கு கவுன்சிலர்கள் கடத்தப்படலாம் என்று கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் புகார் மனு கொடுத்து இருந்த நிலையில், தொடர்ந்து நீதிமன்றத்தையும் நாடி பாதுகாப்பு கேட்டு மனு செய்திருந்தார்.
நீதிமன்றமும் கவுன்சிலர்கள் பதவியேற்புக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை அடுத்து 2ஆம் தேதி சுமார் 30 வாகனங்கள் அணிவகுக்க போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வெளியே வரும்போது அவர்கள் வந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு போலீசார் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இன்று பேரூராட்சித் தலைவர் தேர்தல் நடக்கும்போது ஆளும் கட்சியினரால் அசம்பாவிதங்கள் நடத்தப்படலாம் அதனால் மீண்டும் பாதுகாப்பு வேண்டும் என்று நேற்று நீதிமன்றத்தை நாடி போலீஸ் பாதுகாப்புக்கான உத்தரவையும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு அதிமுக சார்பில் இருந்த கவுன்சிலர்கள் பேரூராட்சி வளாகத்திற்குள் வந்து விட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் தற்போது பேரூராட்சி முன்பாக திமுக - அதிமுக கட்சியினர் திரண்டு இருப்பதால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. ஒருபக்கம் சாலை மறியல் மற்றொரு பக்கம் தர்ணா போராட்டம் என போராட்டக்களமாக மாறியுள்ளது. திமுக வினர் போலிசாரின் தடுப்புகளையும் தள்ளிக்கொண்டு செனறதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக வேட்பாளராக சாலை பொன்னம்மாளும், திமுக வேட்பாளராக மதினா பேகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவ்வளவு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தேர்தல் நடக்குமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதே அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2 வருடங்களுக்கு இதே நாளில் நடந்த தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.