Skip to main content

வெளிநாடுகளில் தவிக்கும் அத்தனை தமிழர்களையும் மீட்டு வருவோம்! -மத்திய அரசு உத்தரவாதம்!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
chennai high court

 

 

கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் அத்தனை பேரையும், தாயகம் மீட்டுவருவதில் தீர்க்கமாக இருப்பதாக, மத்திய அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

 

கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக,  தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு கடந்த முறை  விசாரணைக்கு வந்தபோது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களைத் தாயகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இந்த வழக்கு  நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

 

அதில், கரோனா  காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் அத்தனை தமிழர்களையும் தாயகம் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்டு வர,  ஜூன் 6- ம் தேதி முதல் ஜூலை 20 -ம் தேதி வரை, 101 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.  கடந்த  20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ம் தேதி வரை, 58 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இந்த வழக்கு தொடர்ந்த பின், மொத்தமாக  286 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

 

மேலும், ஆகஸ்ட் 5- ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, இந்தியாவுக்கு இயக்கவுள்ள 792 விமானங்களில், தமிழகத்துக்கு 127 விமானங்கள் இயக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, குறிப்பிட்ட கால அட்டவணையில் விமானங்கள் இயக்கப்படுவதை  உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினர். மத்திய அரசு ஒருவேளை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விவரங்களின்படி விமானங்களை இயக்க தவறும் பட்சத்தில், இதே விவகாரத்தில்  நீதிமன்றத்தை மீண்டும்  அணுக திமுகவிற்கு அனுமதியளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்