Skip to main content

சித்தாள் வேலை செய்த மாணவர்கள் - அரசு பள்ளி அவலம்

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
s

 

பள்ளிக்கு வரும் மாணவ - மாணவிகளை பள்ளியை பெருக்கி கூட்டச்சொல்வது, தண்ணீர் எடுத்து வந்து வைப்பது, ஆசிரியர்களுக்கு விசிறி விடச்சொல்வது, வீட்டு வேலைகளை செய்ய வைப்பது என இருந்த ஆசிரியர்கள் தற்போது கொத்தனார் வேலையை பார்க்க வைத்துள்ளனர். 

 

s

 

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட  மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில்  பயிலும் மாணவர்கள் 15 பேரை நேற்று ( ஆகஸ்ட் 10ந்தேதி ) தலைமை ஆசிரியர் பள்ளியில் கட்டிட  பணியில்  ஈடுபடுத்தி உள்ளார். 

அவர்களும் சிமெண்ட் கலவை கலந்து பக்கெட்டில் நிரப்பி கொண்டும் போய் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி ஒரு மேஸ்திரி சிலச்சில வேலைகளை செய்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வளைத்தளங்களில் பரப்பியுள்ளார்.  இந்த புகைப்படங்களை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். 

 

s

 

நாட்றாம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பின்தங்கிய பகுதி. அந்த பகுதி மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளவர்கள். தங்களது பிள்ளைகளாவது படித்து அரசுப்பணிக்கு செல்ல வேண்டும் என்றே பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அப்படி அனுப்பிய பிள்ளைகளை கொத்தனார் வேலைக்கு பயன்படுத்தியது அவர்களை வேதனைப்படவைத்துள்ளது. 

 

இப்பள்ளி தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சரின் சொந்த தொகுதி ஆகும். ஒரு அமைச்சர் தொகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடத்து இருப்பது கல்வி  ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பந்தப்பட்ட ஆசிரியர்  மீது வேலூர்  மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ் அவர்கள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த படங்களை அவரது பார்வைக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் அனுப்பிவைத்துள்ளனர். 

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது இனி தான் தெரியவரும்.

சார்ந்த செய்திகள்