
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் (டிசம்பர் 3 ஆம் தேதி) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 4 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கவுள்ளது. தெற்கு ஆந்திரா - வட தமிழகத்தின் இடைப்பட்ட பகுதியான சென்னைக்கும் தெற்கு ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 'மிக்ஜாம்' புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 5 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புயல் முன்னெச்சரிக்கை மற்றும் சென்னை, திருவள்ளூருக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நீர் திறப்பு அதிகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 22.69 அடி அளவுக்கு நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.