Skip to main content

காரில் சென்ற ரவுடியை மடக்கிய மர்ம கும்பல்... அரிவாளால் சரமாரி வெட்டி கொலை!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

Rowdy passes away near thali.. police investigating

 

தளி அருகே, காரில் சென்ற ரவுடியை மடக்கிய மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள கும்மளாபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் உதயகுமார் (30), ரவுடி. இவர் மீது தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் ஒரு காவல் நிலையம் என மொத்தம் இரு காவல் நிலையங்களில் 3 கொலை வழக்குகள் விசாரணையில் உள்ளன. 

 

ஏற்கனவே இவர் ஒருமுறை குண்டர் சட்டத்திலும் சிறைக்குச் சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் (ஜூன் 29) இரவு, உதயகுமார் காரில் கும்மளாபுரத்தில் உள்ள கவுரம்மா கோயில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்தது. ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் தன்னைச் சுற்றிவிட்டதை உணர்ந்த உதயகுமார், திடீரென்று காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்திச்சென்ற மர்ம நபர்கள், உதயகுமாரின் பின் கழுத்து, தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். 

 

கொலை திட்டத்தை நிறைவேற்றிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. கிருத்திகா, தளி காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலம், உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும், கொலையுண்ட ரவுடி உதயகுமாரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது பழிக்குப் பழியாக இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், கொலையுண்ட உதயகுமாரின் செல்ஃபோனுக்கு கடந்த ஒரு வாரமாக வந்த மற்றும் அவர் பேசிய செல்ஃபோன் எண்களின் தரவுகளைச் சேகரித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, மது போதையில் தளி அருகே மதகொண்டப்பள்ளியில் இளைஞர் ஒருவர் மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே காவல் நிலைய சரகத்தில் ரவுடி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது