Skip to main content

“பஞ்சாபிகள், வங்காளிகள், தமிழர்கள் போராட்டங்கள் தோற்றதில்லை..”  - வேளாண் சட்ட போராட்டம் குறித்து தமிமுன் அன்சாரி 

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

"Punjabis, Bengalis, Tamils ​​struggles have not fails.." - Tamimun Ansari


மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள் நீதிகேட்டு நெடும்பயணத்தை நடத்தினர்.

 

திருவாரூரில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி, “புறாவுக்காக தன் தொடை சதையை அறுத்துக்கொடுத்து நீதியை நிலைநாட்டிய சோழமன்னர் சிபி ஆண்ட திருவாரூரில், இன்று மத்திய அரசிடம் நீதி கேட்டு நிற்கிறோம்.

 

விவசாயிகளை அலட்சியப்படுத்துபவர்கள் எந்த நாட்டிலும் வென்றதில்லை என்பதுதான் வரலாறு. இன்று நம் விவசாயிகள் டெல்லியில் போராடுவதை நாடே உற்று கவனிக்கிறது. 

 

உலகப் பத்திரிகைகள் முதல்பக்க செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.  ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் நம் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்திரிக்கிறார். இந்தியா ஐ.நா.வில் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது.

 

நாம், வழியெங்கும் நகரில் நடந்து வந்தோம். வீதிகளில், கடைகளில் நின்றவர்கள், கட்டடங்களில் நின்றவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இரக்கம் சொட்ட நம் கோரிக்கையைக் கவனிப்பதை உணரமுடிந்தது.

 

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் உட்பட பலரும் விவசாயிகளின் போராட்டத்தை கவலை ததும்ப பார்க்கின்றனர். விவசாயிகளை இளக்காரமாகப் பார்க்கக் கூடாது. ஆட்சியில் உள்ள சிலர் அப்படி பார்க்கிறார்கள். அவர்கள் நம் வாழ்வுக்காக, உணவுக்காக, மண்ணுக்காகப் போராடுகிறார்கள். 


அவர்கள் ஆயுதப் புரட்சி செய்ய மாட்டார்கள். பசுமைப் புரட்சியை செய்வார்கள். அவர்களது டிராக்டர்கள்தான் அவர்களது பீரங்கிகள் என்பதை மறந்து விடாதீர்கள். 

 

விலை உயர்ந்த கார்கள் செல்லும் டெல்லி வீதிகளில், இன்று விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் ஒத்திகை பார்க்கிறார்கள். தங்கள் விவசாய இழப்புகளை, வருமான இழப்பை பற்றி கவலைப்படாமல் 6 மாதங்களுக்கான உணவுகளோடு வந்து இறங்கிவிட்டார்கள்.

 

பஞ்சாபிகள் தொடங்கி வைத்த போராட்டம், இங்கு தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது. பஞ்சாபிகள், வங்காளிகள், தமிழர்கள் ஆகியோரின் போராட்டங்கள் தோற்றதில்லை. இதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

 

மத்திய அரசு உண்மையிலேயே விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்க வேண்டும் எனில், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் அவர்களின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஆனால் அம்பானி, அதானி போன்றவர்களுக்காக விவசாயிகள் விரும்பாத புதிய சட்டங்களைத் திணிக்கிறார்கள். 

 

விவசாயிகள் அவர்களுக்கு முக்கியமானவர்களாக தெரியவில்லை. எனவே நாம் விவசாயிகளின் நலனுக்காக நடக்கும் போராட்டங்களை வலிமைப்படுத்த வேண்டும். எல்லா விவசாய சங்கங்களும் இணைந்து போராட வேண்டிய காலம் கனிந்து வருகிறது. விவசாயிகளின் உரிமைக்காக, நீதிக்காக களமிறங்கி போராடுவோம்” இவ்வாறு அவர் பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆப்பிரிக்கா வானத்தின் நட்சத்திரம் விழுந்தது... யூசுப் அல் கர்ளாவி மரணம்” - தமிமுன் அன்சாரி 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Yusuf Al Garlawi tamimun ansari

 

ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார். அவரது இழப்பு ஆழ்ந்த துயரத்தை தருகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை தருகிறது. முரண்பாடுகளில் உடன்பாடு என்ற கொள்கையுடன் கருத்து இணக்கத்தை வலியுறுத்தி அவர் எழுதிய நூல்களும், ஆற்றிய உரைகளும் காலம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாக்கம் உடையவை. 

 

காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர் வழங்கிய மார்க்க வழிகாட்டல்களும், இறைத்தூதரின் போதனைகளின் ஊடாக அவர் சுட்டிக்காட்டிய விஷயங்களும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளையும் கடந்து மேலை நாட்டார்களையும் கவர்ந்தது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், அவர் எடுத்துரைத்த கருத்துக்களை வழி மொழிந்தனர். சமகால சிக்கல்களை எளிதாக அணுகி, பாறைகளை போல தோற்றமளித்த விவகாரங்களில், பனித்துளிகளை போல தீர்வுகளை தந்தவர் என்ற அடிப்படையில் அவரது இழப்பு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். 

 

நேர நிர்வாகம், நாம் பிரித்து விட வேண்டாம், முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்.?, திருக்குர்ஆன் கூறும் பொறுமை, இளைஞர்களே... நாங்கள் உங்களிடம்  எதை எதிர்பார்க்கிறோம்.? முரண்பாடுகளில் உடன்பாடு, இஸ்லாம் நடுநிலை மார்க்கம், உள்ளிட்ட இவரது 120 நூல்களின் அணிவகுப்புகள் பிரமிப்புகளை தருபவை.

 

மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, எது முதலில்.? என்ற நூல் மிகப்பெரிய அறிவுக்கொடையாகும். 'சமூக பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜகாத்தின் பங்கு' என்ற இவரின் ஆய்வு கட்டுரை வறுமை ஒழிப்பை பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. ஃபத்வாக்கள் மற்றும் ஆராயச்சிக்கான ஐரோப்பிய மையத்தை இயக்கியதும், அல்ஜெரியா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளில் அறிவொளி பணிகளை நிறுவனமயப்படுத்தியதும், மார்க்க விவகாரங்களில் சீர்திருத்த அணுகுமுறைகளை மேற்கொண்டதும் இவரது ஆளுமைகளை பறைசாற்றியது. 

 

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திர வாழ்வுக்காவும் அவரது இதயம் துடித்த கொண்டே இருந்தது. உலகெங்கும் பரவிய தீவிரவாதத்தையும், தீவிரவாத குழுக்களையும் கடுமையாக எதிர்த்த இவரது துணிச்சலும்  பாராட்டத்தக்கது. Other Side of news என்று உலகை உலுக்கி வரும் அல்ஜெஸீரா பன்னாட்டு ஊடகத்தை உருவாக்கியதில் இவரது பங்களிப்பு அளப்பரியதாகும். இது குரலற்ற மக்களின் குரலை ஒளிபரப்புகிறது. இதன் உருவாக்கத்தில் ஆணிவேராக திகழ்ந்த யூசுப் அல் கர்ளாவியை ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

 

தான் பிறந்த எகிப்து நாட்டில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திட அவர் ஆற்றிய பணிகள் அவரை நாடு துறக்க செய்தது. பிறந்த மண்ணிலிருந்து அகதியாய் செல்ல வழிவகுத்தது. அவர் தொடர்ந்து கத்தாரில் முகாமிட்டு உலகெங்கும் அறிவொளியை சமரசமின்றி, இடையுறாது  பரப்பி வந்தார். அவரது காணொளிகளை வலை தளங்களில் லட்சக்கணக்காணோர் தினமும் கண்டு பயனடைகிறார்கள். மாணவர்களாக மாறி மகிழ்கிறார்கள். இன்று அவர் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். 

 

ஆப்பிரிக்க வானின் நட்சத்திரம் விழுந்து விட்டது. வளைகுடாவில் ஒளி வீசிய முத்து மீண்டும் சிப்பிக்குள் சென்று விட்டது. ஓரிறை உலகம் ஒப்பற்ற மேதையை இழந்திருக்கிறது. பக்குவமும், முதிர்ச்சியும், இணக்கமான சிந்தனைகளும் நிறைந்த ஒருவரை இழந்த வருத்தம் வாட்டுகிறது. இறைவன் அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறப்புற பிரார்த்திக்கிறோம். ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

“ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்”  - மு.தமிமுன் அன்சாரி

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

“Let's give voice to the democratic rights of journalists” - M. Tamimun Ansari

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 

அந்த வகையில் மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் பின், செய்திகளை புலனாய்வு செய்த 'நக்கீரன்' இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ், ஒளிப்பதிவு கலைஞர் அஜீத் குமார் ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மஜக வன்மையாக கண்டிக்கிறது. ஊடகவியலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.