Skip to main content

கடன் தருவதாக கூறி மோசடி... 2 கோடியை சுருட்டிய கும்பல்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020
ரகத

 

 

ஈரோடு  மாவட்டம் பவானியில் தனிநபர் மற்றும் குழு கடன் வழங்குவதாக கூறி ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவதாக கூறி ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தில் சன் மைக்ரோ பைனான்ஸ் என்ற நிறுவனம் சென்ற 23 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பவானி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனிநபர் கடனாக  ஒரு லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரையும், குழு கடனாக நபர் ஒருவருக்கு தலா 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தனர். இதற்காக தனிநபர் கடன் வழங்க  டெபாசிட் தொகையாக  15 ஆயிரம் ரூபாயும், இன்சூரன்ஸ் தொகை 2500 வழங்கினால் தனிநபர் கடன் வழங்கப்படும் என்றும், குழு கடன் வழங்க இன்சூரன்ஸ் தொகை தலா 1250 ரூபாயும் வழங்கினால் 1 சதவீதம்  முதல் 1.5 சதவீதத்தில் கடன் வழங்கப்படும் என சன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் அறிவித்தது.

 

இதனையடுத்து கடனாக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிநபர் கடன் வேண்டியும்,  குழு கடன் வேண்டியும் 2 கோடி வரை அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்து இருந்தனர். இவர்களுக்கு 21 ந் தேதி புதன்கிழமை கடன் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிறுவனம் ஒரு நாள் முன்பே 19 ந் தேதியே திடிரென நிறுவனத்தை காலி செய்துவிட்டு எல்லோரும் எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். கடன் வழங்குவதாக கூறி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்