Skip to main content

ஆயுள் கைதியைத் தப்பிக்க வைத்த சிறை வார்டன் பணிநீக்கம்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

prison warden who escaped the life prisoner was fired

 

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரி. ஆயுள் தண்டனைக் கைதி. இவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நன்னடத்தையின் அடிப்படையில் அவருக்கு சிறைத்துறை நிர்வாகம் சிறை விடுப்பு (பரோல்) வழங்கியது. இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 3 நாள்கள் பரோலில் சென்ற அவர், விடுப்பு முடிந்த பிறகும் சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவானார். 

 

இதையடுத்து  சிறைத்துறை காவலர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர். சிறை வாயில் முன்பு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான  காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர், மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன் என்பவருடன் அவருடைய மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றது தெரிய வந்தது. கைதியை தப்பிக்க வைத்ததாக, உடனடியாக ராமகிருஷ்ணன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில், சிறைத்துறை அலுவலர்கள் கைதி ஹரியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்த தொல்லை தாங்க முடியாமல் தான் தலைமறைவாகிவிட்டதாக சிறைத்துறை அலுவலர்களுக்கு அலைபேசி மூலம் குரல் பதிவு அனுப்பி உள்ளார்.     இதையடுத்து, கைதிகளை சிறை விடுப்பில் செல்ல அனுமதிக்கும் பிரிவில் பணியாற்றி வரும் அலுவலர், கைதியுடன் அலைபேசியில் பேசியவர் உள்ளிட்ட மூன்று பேரிடம் கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் விசாரணை நடத்தினார். ஆனாலும் அவர்கள் மீது எந்த  நடவடிக்கையும் பாயவில்லை.

 

இது தொடர்பாக கோவை மத்திய சிறை கூடுதல் எஸ்பி சதீஸ்குமார் விசாரணை நடத்தினார். இதில், ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்ட  வார்டன் ராமகிருஷ்ணனுக்கும், தலைமறைவான கைதி ஹரிக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணை அறிக்கை, சேலம் மத்திய சிறை எஸ்பி தமிழ்ச்செல்வனிடம் வழங்கப்பட்டது. அதையடுத்து ராமகிருஷ்ணனை சிறை  நிர்வாகம் உடனடியாக நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும், தலைமறைவான ஆயுள் கைதி ஹரியை பிடிக்க சென்னை காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.