
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக கேரளா மாநிலத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை அவர் கேரளா திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்து பாதுகாப்பாக கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்துக்கு சென்றார். கன்னியாகுமரியில் குடியரசுத் தலைவரை ஆளுநர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து தனி படகு மூலம் அவர் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் சென்றார்.
பகல் 12 மணி வரை அங்கிருக்கும் அவர், பிறகு கார் மூலம் விவேகானந்த கேந்திர வளாகத்திற்குச் செல்கிறார். அங்குள்ள ராமாயண கண்காட்சி கூடத்தையும் பார்வையிடுகிறார். மேலும், அங்குள்ள பாரதமாதா கோயிலிலும் வழிபாடு நடத்துகிறார். இதையடுத்து தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையின் காரணமாக கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.