Skip to main content

பிரிந்துசென்ற மனைவி... திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத காதலி... கொலையாளியான காவலர்...

Published on 13/02/2022 | Edited on 13/02/2022

 

police surrenders in bodi police station on a case

 

தேனி மாவட்டம் போடியில் சனிக்கிழமை நள்ளிரவு பெண் வனக்காவலரை கழுத்தை நெறித்து கொலை செய்த ஆயுதப்படை காவலர் மதுரை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

 

மதுரை சதாசிவம் நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பொன்பாண்டி என்பவரின் மனைவி சரண்யா. இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக பணிபுரிந்து வந்தார். போடியில் வனத்துறை அலுவலகம் அருகே ரமேஷ் என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்கு வருடம் முன்பு இவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகளும் சரண்யாவின் பெற்றோர் வீட்டில் உள்ளனர்.

 

இந்த சூழலில், தனியாக வசித்து வந்த சரண்யாவை கொலை செய்துவிட்டதாக மதுரை அனுப்பானடியை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் திருமுருகன் என்பவர் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் ஞாயிறன்று அதிகாலை சரணடைந்தார். இதனையடுத்து கீரைத்துறை போலீஸார் தகவலின் பேரில் போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் போடியில் சரண்யா வசித்து வந்த வீட்டில் சென்று பார்த்தபோது சரண்யா கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரிந்தது.

 

விசாரணையில் சரண்யாவும், திருமுருகனும் மதுரை பகுதியில் வசித்து வந்த நிலையில், இருவரும் காவல்துறையில் சேருவதற்காகப் பயிற்சி வகுப்புக்குச் சென்றபோது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். பின்னர், திருமுருகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமான நிலையில், சரண்யாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதால் திருமுருகனின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து திருமுருகன் அடிக்கடி போடிக்கு வந்து சரண்யா வீட்டில் தங்கிவிட்டுச் செல்வது வழக்கம்  நேற்று சனிக்கிழமை இரவிலும் திருமுருகன் வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் திருமணம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில் திருமுருகன் சரண்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். திருமுருகன் மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். 

 

இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போடி நகர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்தில் காவல்துறை மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்ததில், கொலை நடந்த வீட்டிலிருந்து ஓடிய நாய் போடி பேருந்து நிலையம் வரை சென்றது. குற்றம் செய்தவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கைரேகை நிபுணர்களும் போலீஸாரும் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.