Skip to main content

’அதிமுக என்ற கட்சியின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது’-ஸ்டாலின்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

 

st


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை:

 

’’முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் பத்திரிகையாளர்களை சந்தித்து “உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது” என்று அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தன் மீதுள்ள ஊழல் புகாருக்கு பதில் சொல்லக்கூட அஞ்சி பரிதாபகரமான நிலையில் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, அ.தி.மு.க அமைப்பாளர் மூலம் பதில் சொல்லியிருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சரிடம் பதில் இல்லை என்பதையும், அந்த ஊழல் புகார்கள் உண்மை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.

 

“லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பு. விஜிலென்ஸ் கமிஷனரும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவர்” என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் எடுத்து வைத்த வாதங்களை நேற்றைய தீர்ப்பில் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. “நெடுஞ்சாலைத்துறையில் உள்ள எம்பவர்ட் கமிட்டியின் தலைவர் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி  பழனிசாமி. லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் இயக்குநர் மற்றும் விஜிலென்ஸ் ஆணையரை நியமிப்பவர் முதலமைச்சர். ஆகவே முதலமைச்சருக்கு எதிரான ஊழல் புகாரினை லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரிப்பது நேர்மையாக இருக்காது” என்று சுட்டிக்காட்டித்தான் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அளித்துள்ளது. லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, விஜிலென்ஸ் ஆணையம் போன்ற அமைப்புகளின் நேர்மைத்தன்மை, சுதந்திரம் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் வெளிவந்துள்ள அ.தி.மு.க அமைப்புச் செயலாளரின் பேட்டி லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமல்ல - அ.தி.மு.க என்ற கட்சியின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது. ஒரு வார காலத்திற்குள் ஊழல் தொடர்பான கோப்புக்களை சி.பி.ஐ.யிடம் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை போடும் விதமாக இந்த பேட்டி அளிக்கப்பட்டுள்ளது.

 

லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையின் அப்பீல் பற்றி அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் எப்படி முடிவு செய்ய முடியும்? முதலமைச்சர் மீது மட்டுமல்ல - அ.தி.மு.க அமைச்சர்கள் மீது நிலுவையில் ஊழல் வழக்குகளிலும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் நடவடிக்கைகளை அ.தி.மு.க தலைமைக் கழகம்தான் இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்தி விருப்பம்போல் ஆட்டிவைக்கப் போகிறது என்றதொரு மிகவும் வெட்கக்கேடான நிலைமை அ.தி.மு.க ஆட்சியில் உருவாகியிருக்கிறது..

 

ஆகவே இதற்குப் பிறகும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையோ, விஜிலென்ஸ் கமிஷனோ “தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு” என்று கூறும் எந்தவொரு அருகதையும் அ.தி.மு.க அரசுக்கும் இல்லை. இந்த மெகா ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளாகி இருக்கும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு அறவே இல்லை. ஆதாரபூர்வமான ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி - குறிப்பாக தனது துறையிலேயே கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குற்றத்திற்கு உள்ளாகியுள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் அனைத்து தார்மீக உரிமைகளையும் இழந்து விட்டதால், உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக நலனுக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். முதலமைச்சர் பதவியிலிருந்து விலக மறுத்தால், அவரை  ஆளுநர் அவர்களே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதுவே தமிழக மக்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.’’

சார்ந்த செய்திகள்

 

Next Story

“அதிமுக வீண் விளம்பரம் தேடுகிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் விளாசல்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
CM MK Stalin says ADMK is looking for advertisement

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள்  காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

இதனையடுத்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். 

CM MK Stalin says ADMK is looking for advertisement

இது தொடர்பாக அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். அதன்பிறகு அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கைய சபாநாயகர் அப்பாவு எடுத்துள்ளார்.

சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப்பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அதிமுக எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். 

CM MK Stalin says ADMK is looking for advertisement

சபாநாயகரும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், மக்கள் பிரச்சனையைப் பற்றி சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு”எனத் தெரிவித்தார். 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு - இன்று தனித் தீர்மானம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Caste wise census - separate decision today

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் (24.06.2024) சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்குப் பிறகுதான் இதை அமல்படுத்த முடியும் ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

Caste wise census - separate decision today

ஜி.கே. மணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமெனப் பேசினார். அதற்கு அமைச்சர்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே. மணி ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு செய்தது. மேலும் இது தொடர்பாகச் சட்டப்பேரவை வளாகத்தில் பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு படி தான் உள் ஒதுக்கீடு வழங்குவோம் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சனை. ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்குத் தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Caste wise census - separate decision today

இந்நிலையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று (26.06.2024) தனித் தீர்மானத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்த்து நடத்த வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.