Published on 04/01/2021 | Edited on 04/01/2021

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், குளந்திரான்பட்டு கிராமத்தில் 100 நாள் வேலை நடந்துகொண்டிருந்தபோது, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த தலித் இளைஞர் சிவக்குமார் என்பவரை, தொழிலதிபர் கரிகாலன் தனது செருப்பைக் கழற்றி அடித்ததாகக் கறம்பக்குடி காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால், சில நாட்கள் வரை அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மற்றும் லெனினிஸ்ட் மாக்சிஸ்ட் கட்சியினர் கண்டன அறிக்கைகளும் போராட்டங்களும் அறிவித்தனர். இந்நிலையில் கரிகாலன் மீது கறம்பக்குடி போலீசார் பி.சி.ஆர். வழக்குப் பதிவு செய்துள்ளனர். தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் கொடுத்தவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.