Skip to main content

கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்; சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பதாக அமைச்சர் உறுதி!

Published on 04/04/2023 | Edited on 04/04/2023


 

minister periyasamy participated for dindigul pandrimalai hospital stone laying function

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் பன்றிமலையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட இருக்கும் நவீன மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பின் பன்றிமலை கலையரங்கத்தில் நடைபெற்ற நலத்திட்ட விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் பிரேம்குமார் வரவேற்று பேசினார்.

 

அதனைத் தொடர்ந்து ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், சுய உதவிக் குழு பெண்களுக்கு கடனுதவி மற்றும் பேய்திரைக்காடு பகுதியில் வசிக்கும் 18 ஆதிவாசி குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிவிட்டு பொதுமக்கள் மத்தியில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, "கடந்த 12 வருடங்களுக்கு முன்பு மணலூர் மற்றும் ஆடலூர் மலை கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச கலர் டிவி மற்றும் எரிவாயு அடுப்பு வழங்கிய பின்பு மலை கிராம மக்கள் தங்களுக்கு மருத்துவ வசதி வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் பின்னர் வந்த அதிமுக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

 

ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் அரசாக செயல்படும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை விடுத்த உடன் உடனடியாக பன்றிமலை மற்றும் ஆடலூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் மலைவாழ் மக்களும் பயன்பெறும் வகையில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன மருத்துவமனை வசதி செய்து கொடுத்துள்ளார். இப்பகுதி மக்கள் தங்களுக்கு திருமண மண்டபம் வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக அவர்களுக்கு திருமண மண்டப வசதி செய்து கொடுக்கப்படும். இது தவிர எனது சொந்த செலவில் உயர் சிகிச்சைக்காகவும், முதலுதவிக்காகவும் மலை கிராம மக்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பேன்" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்