
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் துரைமுருகனிடம், “ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம்” என்று துரைமுருகன் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, “சொல்லுதல் யார்க்கும் எளியவாம் என ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’”என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பதிலளித்துச் சென்றார்.