
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் லாலா என்கிற சுப்பிரமணி(32). இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் ஒரு வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுப்பிரமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மேலூர் பகுதியில் சுப்பிரமணி கை, கால்கள் கட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சுப்பிரமணி அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணனிடம் ரூ.200 கடன் கொடுத்துள்ளார். நேற்று முன் தினம் போதையில் இருந்த சுப்பிரமணி கடன் பணம் ரூ.200 திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கமலக்கண்ணனைச் சுப்பிரமணி தாக்க முற்பட்டுள்ளார். அதனை கமலக்கண்ணனின் தங்கை மற்றும் தாய் இருவரும் தடுக்க வந்தபோது சுப்பிரமணி அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன்(32), அவரது சகோதரர் கார்த்திக்(28), உறவினர்கள் அருண்பாண்டியன்(26), அலெக்ஸ் பாண்டியன்(23), பெரியசாமி(26) ஆகிய 5 பேரும் சுப்பிரமணியை அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தூணில் கை வைத்து தாக்கியுள்ளனர். அத்துடன் கமலக்கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து சுப்பிரமணியை குத்தியுள்ளார். அதனால் நிலைகுலைந்து சுப்பிரமணி சரிந்த நிலையில் 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 5 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.