தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாகப்பட்டணம் அருகில் உள்ள பொரவச்சேரியைச் சேர்ந்த இளைஞர் முஹம்மது பைசான் நேற்று இரவு மாட்டுக்கறி சூப்பைச் சாப்பிட்டு அதனைப் புகைப்படமாக எடுத்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பிறகு மாட்டுக்கறி சாப்பிட்டார் என்றே ஒரே காரணத்திற்காக அப்பகுதி சேர்ந்த வன்முறை கும்பல் முஹம்மது பைசான் வீட்டிற்குச் சென்று, அவரை கடுமையாகத் தாக்கியும், கத்தி போன்ற பயங்கர ஆயுதத்தால் அவரை குத்திவிட்டுத் தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பைசான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
![M. H. Jawahirullah](http://image.nakkheeran.in/cdn/farfuture/c8VVZ6Ah-J60o9zdhyEG4SDt4cJFO5HitzKzKuaquno/1562917185/sites/default/files/inline-images/M.%20H.%20Jawahirullah.jpg)
நாட்டில் பா.ஜ.க இரண்டாவது முறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து சங்கி கும்பல் அராஜகமும் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்ட கால ஆட்சியின் போதே மாட்டுக்கறி சாப்பிட்டதற்காகவும், மாடுகளை வாகனங்களில் ஏற்றிச்சென்றதாகவும் உ.பி. ஜார்கண்ட், ராஜஸ்தான் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் அப்பாவி மக்களை அடித்துத் துன்புறுத்தினார்கள். அதன் தொடர்ச்சி தற்போது தமிழகத்திலும் அத்தகைய கொடூரம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக அமைதியைச் சீர்குலைக்கத் திட்டமிட்டு சில வன்முறை கும்பல்களால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகிறது.
எனவே, தமிழகக் காவல்துறை இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் அவர்களை ஏவியவர்களையும் உடனடியாகக் கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.