Skip to main content

விட்டுப்போன காதலியால் வேறு திருமணம் செய்துவைத்த பெற்றோர்... வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

Love marriage in vilupuram incident

 

காதலியுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ளபோது காதலி வேறு ஒருவருடன் சென்று விட்டதால் பெற்றோர் உறவுக்கார பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்த நிலையில் இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள நாபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன் என்பவரின் மகன் குமரேசன். இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 23ஆம் தேதி பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பாக கடந்த 20ஆம் தேதி மணப்பெண் வேறு ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார் குமரேசன்.

 

திட்டமிட்டபடி மகனுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக குமரேசனின் பெற்றோர் உறவுக்காரப் பெண் ஒருவரை 23 ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லையே என மனமுடைந்த நிலையில் குமரேசன் கடந்த 25 ஆம் தேதி அவர்களுக்குச் சொந்தமான வயலில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக குமரேசன் தற்கொலை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ''தன்னை காதலித்த பெண் தன்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவரை மறந்தாலும் பழகிய நினைவுகளை மறக்க முடியவில்லை. நான் பதிவிடும் இந்த வீடியோவை வாட்ஸ் அப் குழுக்களில் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம் அப்போதுதான் பெண்கள் இதுபோன்று நேசித்தவர்களை விட்டுச் செல்ல மாட்டார்கள்'' என உருக்கமாகப் பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.