Skip to main content

வெள்ளத்தில் தத்தளிக்கும் குமரி... 2 தேசிய மீட்பு படையினர் விரைவு!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக கனமழை தொடர்ந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. சரல்விளை, மூஞ்சிறை, குழித்துறை, பேயன்குழி, செண்பகராமன் புதூர், சென்னித்தோட்டம் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமரியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 2 தேசிய மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். கன்னியாகுமரி மக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரவேண்டாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
 

இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தென்காசியிலும் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பொழியும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார் பகுதியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவானது. தக்கலை, சுருளகோட்டில் தலா 14, பெருஞ்சாணி அணை 12, இரணியல், நாகர்கோயிலில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்