Published on 29/04/2020 | Edited on 29/04/2020

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கரோனா தொற்று நேரத்தில் கபசுரக் குடிநீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த குடிநீரை ஒரு நாளைக்கு எவ்வளவு பயன்படுத்த வேண்டும். இதனை குடிப்பதனால் என்ன நம்மை கிடைக்கும் என்று, பொதுமக்கள் மத்தியில் கடலூர் மாவட்ட சித்த வைத்திய சங்கத்தின் பொதுசெயலாளர் கருணாமூர்த்தி தலைமையிலான சித்தவைத்தியர்கள் விளக்கி கூறினார்கள்.
அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் "கரோனா தொற்று நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சித்த வைத்தியத்தின் முக்கிய மூலிகையாக விளங்கும் கபசுரக் குடிநீருக்கு அங்கிகாரம் வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார், இதனை வரவேற்கிறோம். பிரதமரும் இதனை வரவேற்று கபசுரக் குடிநீர் குடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார், இதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் சித்த மருத்துவத்தை தமிழகத்தில் வலுபெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் 4448 நோய்கள் குணமாக சித்தர்களும், பெரியோர்களும் பல வழிவகைகளை கையாண்டுள்ளனர். 18 சித்த மூலிகை கொண்டு உருவாக்கப்பட்ட கபசுரக் குடிநீர் யாருக்கும் சொந்தமானது அல்ல. இது அனைத்து வித காய்ச்சல் மற்றும் கப நோய்களை சரிசெய்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லை" என்றார். இந்நிகழ்ச்சியில் சித்த வைத்திய சங்கத்தின் பொருளாளர் ரவி, இணைசெயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட சித்த வைத்தியர்கள் உடன் இருந்தனர்.