கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ளது வடசெட்டியந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகள் நாகேஸ்வரி (17). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென்று காணாமல் போயுள்ளார்.
தமது மகள் காணாமல் போனது குறித்து உற்றார் உறவினர் நண்பர்கள் என அனைவரது வீடுகளிலும் தேடிப்பார்த்தும் நாகேஸ்வரி கிடைக்கவில்லை. இதனிடையே பொராசபட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் 22வயது தினேஷ் என்பவர் நாகேஸ்வரியைக் கடத்திச் சென்றுள்ளதாக சங்கராபுரம் காவல் நிலையத்தில் பரசுராமன் தகவல் கொடுத்துள்ளார்.
அவர் அளித்த தகவலின்பேரில் சங்கராபுரம் போலீசார் விசாரணை செய்து தினேஷ், குணசேகரன் நாகேஸ்வரியைக் கடத்திச் சென்றுள்ளனர் என்றும் அவரை கடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்ததாக வடசெட்டியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், சக்தி, பிரபாகரன், உட்பட ஆறு பேர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். மாணவியின் கடத்தலுக்குக் காரணம் காதலா அல்லது முன் விரோதமா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.