Skip to main content

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; சென்னையில் விண்ணப்ப விநியோகம்  தொடங்கியது

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

kalaignar Women Entitlement Scheme Application distribution has started in Chennai

 

மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

 

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல், அரசாணை வெளியிடுதல், சிறப்பு அதிகாரிகள் நியமித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து  சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தைச் செயல்படுத்துவது மற்றும் இந்த திட்டத்திற்கு டோக்கன் வழங்குவது, விண்ணப்பம் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர், சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் இதுகுறித்து தெரிவிக்கையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ரேசன் கடைகள் மூலமாக ஜூலை 20 ஆம் தேதி முதல் நேரடியாக விண்ணப்பதார்களின் வீடுகளுக்கு  டோக்கன் மற்றும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் விநியோகம், டோக்கன் விநியோகம் தொடர்பான விபரங்கள் ரேசன் கடைகள் முன்பாக அறிவிப்பு பலகை வைக்கப்படும். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு வருகை தந்தால் போதுமானது. இந்த திட்டத்திற்காக குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு அட்டை, வங்கி கணக்கு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பயனாளிகள் சேர்ப்பு தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்குச் சிறப்பு முகாம்களிலேயே வங்கிக்கணக்கு ஏற்படுத்தி தரப்படும். பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்து இருந்தார். 

 

இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை மாநகராட்சி சார்பில் முதல் கட்டமாக இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள், டோக்கன் ஆகியவை பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன சத்யபிரதா சாகு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Sathyaprada Saku gave happy news to women's rights scheme beneficiaries

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் மீதம் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அரசு ஏற்கனவே செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளன. எனவே தேர்தல் ஆணையத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்க எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், உரிமைத் தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை” - அமைச்சர் உதயநிதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
“Entitlement amount to all eligible women” - Minister Udayanidhi

தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விடுபட்டவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தலுக்கு பிறகு அனைத்து தகுதியுள்ள மகளிருக்கும் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.