கடந்த 3 ஆம் தேதி தேனி போடியில் வறுமையில் சிக்கித்தவித்த தாய் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் 3 ஆம் தேதியே இரண்டு மகள்கள் இறந்துவிட்ட நிலையில் தற்போது உயிருக்கு போராடிவந்த தாயும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியில் குடியிருந்து வந்த பாண்டி லட்சுமி தம்பதிகளுக்கு பத்தொன்பது வயதில் அனுசியா, பதினாறு வயதில் ஐஸ்வர்யா, ஏழு வயதில் அக்க்ஷயா என மூன்று பெண்கள் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு லட்சுமியின் கணவர் பாண்டி இறந்துவிட்டார்.
![incident in theni district](http://image.nakkheeran.in/cdn/farfuture/lZnY4JvnJF8T02x60gxDnWeQJXeZ27abclEW4yQhSVw/1570448883/sites/default/files/inline-images/000543_0.jpg)
இதனால் லட்சுமி மூன்று பெண்களை வைத்து வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து கஷ்டப்பட்டு வந்தவர். இனி வரும் காலங்களில் எப்படி மூன்று பிள்ளைகளையும் கரைசேர்க்க போகிறோமோ என மனம் நொந்து போய் இருந்த தாய் லட்சுமிக்கு அவரது அண்ணன் அவ்வப்போது வந்து ஆறுதல் கூறியும் வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி அதிகாலையில் வழக்கம்போல் தூங்கி எழுந்த லட்சுமி தன் பிள்ளைகளை பார்த்து கண்கலங்கிவிட்டு டீக் கடைக்கு சென்று காபி வாங்கி வந்தவர், அந்த காபியில் விஷத்தை கலந்து நான்கு டம்ளர்களிலும் ஊற்றி தூங்கி கொண்டிருந்த மூன்று பிள்ளைகளையும் எழுப்பி அந்த விஷம் கலந்த காபியை கொடுத்து குடிக்கசொல்லிவிட்டு தானும் அழுதவாறே குடித்தார்.
![incident in theni district](http://image.nakkheeran.in/cdn/farfuture/3V1OxVbo5nQKs3jfUSAGb_FWqDN-pFqjTB4Lh8f2agM/1570449004/sites/default/files/inline-images/500X3001111_1.jpg)
அடுத்த சிறிது நேரத்திலேயே தாய் உள்பட நான்கு பேருமே வாயில் நுரை தள்ளி கீழே விழுந்து கிடந்தனர். அதைக்கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக லட்சுமியையும், மூன்று பிள்ளைகளையும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அனுசியாவும், ஐஸ்வர்யாவும் பரிதாபமாக இறந்தனர். ஆனால் லட்சுமி, அக்ஷையா உடல்நிலை மோசமடைந்து வருதைக்கண்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த லட்சுமியின் உடல்நலத்தில் எந்த ஒரு முன்னேற்றம் ஏற்படாதிருந்த நிலையில் நேற்று திடீரென லட்சுமியும் இறந்துவிட்டார். இப்படி ஒரே குடும்பத்தில் வறுமையின் காரணமாக தாய் உள்பட இரண்டு மகள்கள் இறந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.