Skip to main content

காற்றாடி மாஞ்சாநூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழப்பு!

Published on 03/11/2019 | Edited on 03/11/2019

சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் அறுத்ததில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்ற 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

 

காற்றாடி மாஞ்சாநூல் அறுத்து

 

சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் வடநாட்டை சேர்ந்த மோகித் என்பவர் தனது  3 வயது ஆண் குழந்தையுடன் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேலே பறந்துவந்த காத்தாடி நூல் 3 வயது குழந்தை அபினேஷின் கழுத்தில் பட்டதில் குழந்தையின் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த குழந்தை அபினேஷ் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே  பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஆர்கே நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வடசென்னை பகுதிகளில் தற்போது அதிகமாக காற்றாடி விடுவது வழக்கம் ஆனால் காற்றாடி விடுவதற்கு போலீசார் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காற்றாடி,  மாஞ்சா கண்ணாடி துகள்கள் வைத்துள்ளவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல் காற்றடி விற்கும் இடங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்பொழுது தீபாவளி முடிந்து ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் காத்தாடிகள் விட்டு வருகின்றனர் இளைஞர்கள். இந்நிலையில் கொருக்குபேட்டை பகுதியில் மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்