Skip to main content

"எனக்கு பொருளாதாரம் தெரியாது... ஆனால் பசி, பட்டினி பற்றி தெரியும்!" - பேரவையில் ஆர்.பி உதயகுமார் பேச்சு!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

j

 

தமிழக பட்ஜெட் கடந்த 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. கூட்டம் துவங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

அதன்பிறகு, நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது, "நிதிநிலை அறிக்கை என்பது தாய்ப்பூனை குட்டியைக் கவ்வுவது போல் இருக்க வேண்டும். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பூனை, எலியைக் கவ்வுவது போல் இருக்கிறது. எனக்கு பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லை என்றாலும், ஏழைகளின் பசி, பட்டினி பற்றி தெரியும். நிதிநிலையைக் காரணம் காட்டி திமுக எந்த ஒரு வாக்குறுதியையும் கைவிட்டு விடக்கூடாது" என்றார். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், "எங்கள் தேர்தல் வாக்குறுதியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவதற்கு இத்தேர்தல் ஒரு அச்சாரம்” -  ஆர்.பி. உதயகுமார்

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

ex minister rp udhayarakumar talk about erode east byelection

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 8ம் தேதி காலை 42வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் வீதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்குச் சென்று டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் துணிகளை அயன் செய்து கொடுக்கும் கடைக்குச் சென்று துணிகளை அயன் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

 

பின்னர்  உதயகுமார் நிருபர்களிடம் பேசுகையில், “இந்த தேர்தலை ஆளும் கட்சியின் பண பலம், அதிகார பலம் கொண்டு சந்தித்து வருகிறது. நாங்கள் சத்தியத்தையும், உண்மையையும் சொல்லி மக்களை சந்தித்து வருகிறோம். இதனால் எங்கள் பிரச்சாரம் மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது. மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசு எத்தனை சுமைகள் வந்தாலும் அதனைத் தாங்கிக் கொண்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தாமல் இருந்த அரசு. எடப்பாடி வகுத்துக் கொடுத்த வியூகத்தின் அடிப்படையில் அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெறும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் இந்த திமுக அரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்று 520 திட்டங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

 

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள். இதுவரை ஒன்றும் செய்யவில்லை. மடிக்கணினி திட்டம் கேள்விக்குறியாக இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மடிக்கணினி வழங்குவது தொடர்பாக சாக்கு போக்கு சொல்லி வருகிறார். முதல் தலைமுறையினர் அதிமுகவுக்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டனர் . ஈரோடு நகர் பகுதியில் சொத்து வரி உயர்வு, மின்சார உயர்வு, விலைவாசி உயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பல்வேறு தடைகளை தாண்டி பல்வேறு துரோகங்களை தாண்டி எடப்பாடி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்துள்ளார். திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தையும் தாண்டி அதிமுக வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தில் பணம் பாதாளம் வரை சென்றாலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும், அதிமுக வெற்றி பெறும். மக்கள் அளிக்கும் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு இந்த தேர்தல் ஒரு அச்சாரமாக அமையும்” என்றார்.

 

 

Next Story

"இங்க வந்து சத்தமெல்லாம் போட்டுட்டு இருக்கக் கூடாது..." - முன்னாள் அமைச்சர் மீது கோபப்பட்ட பசும்பொன் மக்கள் 

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

pasumpon village people angry ex minister rp udhayakumar

 

“தேவர் ஐயா எதிர்ல சத்தம்லாம் போட்டுட்டு இருக்கக் கூடாது, ஒழுங்கா ஓடிப் போய்டு..” ஆர்.பி. உதயகுமாரை ஒருமையில் பேசும் வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலைப் போராட்ட தியாகியும் பார்வர்டு ப்ளாக் (FORWARD BLOCK) கட்சியின் தலைவருமான முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் பகுதியில் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அந்த நாளில் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள்.

 

இதனையடுத்து, முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா பசும்பொன் பகுதியில் நடைபெறுகிறது. இந்த விழாவானது, அக்டோபர் 28ம் தேதியில் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேவர் ஜெயந்தியை ஒட்டி பசும்பொன் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தேவர் நினைவிடத்திற்கு செல்லமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் தற்போது தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி செல்லாதது கட்சிக்கு நல்லதல்ல என சொந்தக் கட்சியினரே கூறி வருகின்றனர்.

 

இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அங்கிருந்த சில அதிமுக தொண்டர்கள்  “அண்ணன் ஆர்.பி உதயகுமார் வாழ்க, வருங்கால முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வாழ்க” என தேவர் நினைவிடத்திற்கு உள்ளேயே கோஷம் போடத் தொடங்கியுள்ளனர்.

 

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பசும்பொன் கிராம மக்கள் அங்கு வந்த ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சிலர் ஆர்.பி. உதயகுமாரை கடுமையாகச் சாடியுள்ளனர்.  அப்போது, அதில் ஒருவர் பேசும்போது “யார்ரா அது எடப்பாடி வாழ்கனு கோஷம் போட்டது...நீங்கள் அமைச்சரா இருங்க, யாரா வேணாலும் இருங்க...இங்க வந்து சத்தம் எல்லாம் போட்டுட்டு இருக்கக் கூடாது. வந்தோமா...சாமி கும்பிட்டோமா...போனோமான்னு இருக்கனும்...ஒழுங்கா ஓடிப் போய்டுங்க...(அங்கு முன்னாள் அமைச்சரை ஒருமையில் பேசினார்கள். அதை நாம் மரியாதை நிமித்தத்திற்காக மாற்றியுள்ளோம்) என ஆர்.பி. உதயகுமாரை திட்டித் தீர்த்துள்ளார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுக நிர்வாகிகள், அவர்களை சமாதானப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவில் ஆர். பி. உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகிறது.