Skip to main content

வேலைக்கு போகாமல் டிக்டாக், பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் கணவர் தொடர்பு! மனைவி விபரீத முயற்சி...

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

 

டிக்டாக், பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் பழகிய தனது கணவர், அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது விரிஞ்சிபாக்கம் கிராமம். இந்த ஊரை சேர்ந்த இளைஞர் செல்லமுத்து. இவரும் வேலூர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த யாமினி என்ற இளம்பெண்ணும் புதுச்சேரியில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு பயிற்சி பள்ளியில் ஒன்றாக பயிற்சி எடுத்துள்ளனர். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்தோடு 2018ல் திருமணம் செய்து கொண்டனர்.

 

tic tok



இருவரும் கணவர் ஊரான விரிஞ்சிபாக்கம் கிராமத்தில் வசித்து வந்தனர். கணவர் செல்லமுத்துவோ சதா நேரமும் செல்போன் மூலம் டிக் டாக் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் மூழ்கி கிடந்துள்ளார். வேலைக்கு சென்று சம்பாதிக்காமல் எப்போதும் செல்போனிலேயே காலம் கழித்ததால் மனைவி யாமினி அவ்வப்போது கண்டித்துள்ளார்.
 

இதனால் கோபமான செல்லமுத்து மனைவியை திட்டித் தாக்கியுள்ளார். இதனால் ஒருமுறை யாமினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். இதன் பிறகும் செல்லமுத்து சதா எந்த நேரமும் டிக் டாக் மற்றும் பேஸ்புக் என செல்போனிலேய மூழ்கி கிடந்துள்ளார். 
 

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் செல்போனிலேயே நேரத்தை கணவர் வீணாக்குவதை கண்டு கோபமடைந்த யாமினி, அவரது செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அதில் பேஸ்புக் மூலம் ஏராளமான பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி அதில் தவறான செய்திகள் படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. 


 

 

இதுகுறித்து கணவர் செல்லமுத்துவிடம் கேட்டுள்ளார். அதற்கு செல்லமுத்து, தான் அப்படித்தான் செய்வேன். உன்னால் என்ன செய்ய முடியும் என்று மிரட்டி தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் மனம் வெறுத்து கோபமடைந்த யாமினி மீண்டும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி கிடந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தகவலை அறிந்த புதுப்பேட்டை போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கணவன், மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சமூக ஊடகங்களை நல்ல செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும், தவறான வழியில் பயன்படுத்துவதால் இதுபோன்ற பிரச்சினையில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை வரும். எனவே அவற்றை பொறுப்புடன் கையாள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்