
பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
அதனைத் தொடர்ந்து 01/06/2025 அன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ''என்னை யாரும் இயக்க முடியாது. சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அன்புமணி சொல்வது அவருடைய கருத்து. அன்புமணி விகாரம் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது எல்லா கட்சிகளிலும் நடக்கும் ஒன்றுதான்' என தெரிவித்திருந்தார்.இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் பாமக நிர்வாகிகள் குறிப்பாக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (05/06/2025) தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டதாக தகவல் வெளியானது. சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் தைலாபுரம் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அதேநேரம் முன்னதாக நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால்வளவன் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''எங்களுக்கு அறிவு புகட்டியவர், சமூக நீதி சொல்லிக்கொடுத்தவர் ராமதாஸ். அவருக்கு சின்ன மன மகிழ்வை தர வேண்டும் என்ற நோக்கத்தில் வந்துள்ளேன். எந்த அரசியல் காரணத்திற்காகவும் வரவில்லை. அன்புமணி தைலாபுரம் தோட்டத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் நான் வருகை தந்திருக்கிறேன். ஏனென்றால் அன்புமணி ராமதாஸ் என்னுடைய வருகையை விரும்ப மாட்டார். நாளையோ நாளை மறுநாளோ தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாஸின் காலடியில் வந்து சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வருகை. சமாதானம் பேச வரவில்லை. நான் வந்தேன் என்று சொன்னாலே அன்புமணி வந்துவிடுவார்'' என தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று அன்புமணி, ராமதாஸை சந்தித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.