Skip to main content

நண்பர்கள் போனில் சொன்ன தகவல்: வெளிநாட்டில் இருந்து வந்தவுடனேயே மனைவியை கொலை செய்த கணவன்

Published on 07/10/2018 | Edited on 07/10/2018
Husband killed wife



நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் உருட்டு கட்டையால் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்தார். இதனால் கணவரை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமசாமி - கவுசல்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 
 

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி வேலைக்காக வெளிநாடு சென்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி ராமசாமி வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 
 

வெளிநாட்டில் இருந்து வந்த அன்றே வீட்டில் என்ன சண்டை போடும் சத்தம் கேட்கிறது என்று அக்கம் பக்கத்தினர் தெருவில் கூடினர். 
 

கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாம் அதிகமானது. இதில் ஆத்திரம் அடைந்த ராமசாமி வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் கவுசல்யாவை சரமாரியாக தாக்கினார்.
 

இதில் கவுசல்யா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
 

இதுகுறித்து கவுசல்யாவின் தந்தை செந்தில்குமார் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.
 

திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட கவுல்யாவை உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 


இதனால் கவுசல்யா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

 

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கவுசல்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கவுசல்யா இறந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து ராமசாமியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
 

ராமசாமியின் நண்பர்கள் வெளிநாட்டில் இருந்த அவரை செல்போனில் தொடர்பு கொண்டு, கவுசல்யாவின் நடத்தை குறித்து புகார் தெரிவித்ததாகவும், இதையடுத்து அவர் உடனே வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவுடன் மனைவியிடம் இதுகுறித்து சண்டைப் போட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. 

 

கவுசல்யாவின் உறவினர்களும், ராமசாமியின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும், யாராவது ஏதாவது சொன்னால் நம்பிவிடுவதா? விசாரிக்க வேண்டாமா? வெளிநாட்டில் இருந்து வந்த ராமசாமி, எங்களிடம் விசாரித்திருக்கலாம்.

நண்பர்கள் சொன்னார்கள் என்றால், அந்த நண்பர்கள் மூலம் கவுசல்யாவுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்ததா என்பதை எப்படி இனி கண்டுபிடிப்பது. நண்பர்கள் சொன்னது பொய் என தெரிய வந்தால் போன உயிர் திரும்பி வருமா? மனைவி மீது நம்பிக்கை இல்லாதவர் எதற்காக வெளிநாடு சென்றார் என்றனர் கண்ணீரோடு.

வெளிநாட்டில் இருந்து வந்தவுடனேயே மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

 


 

சார்ந்த செய்திகள்