Skip to main content

போலி பாஸ்போர்ட்! - பிடிபட்ட கிரிமினல்! 

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Fake passport! Caught criminal!

 

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், போலி பாஸ்போர்ட் மூலம் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகச் சென்னை ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பாஸ் பண்ணப்பட்டது. 

 

அதன் பேரில் இந்த மாதம் 4ம் தேதி மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளிடம் இமிக்ரேசன் அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை நடத்தினர். அப்போது, ராமநாதபுரம், பரமக்குடி அருகே உள்ள அக்ரமிசியைச் சேர்ந்த பாலுச்சாமியின் மகன் முருகன் என்பவரின் பாஸ்போர்ட்டை பரிசோதித்தனர். பரிசோதித்துக் கொண்டே பல கேள்விகளை அவரிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொன்னார் முருகன். 

 

இதனால் அவர் மீது சந்தேகம் கொண்ட இமிக்ரேசன் அதிகாரிகள், தீவிரமாகப் புலனாய்வு செய்ததில், அவரது உண்மையான பெயர் ஜெகன் என்பதையும், ராமநாதபுரம் பெரியபட்டிணத்தைச் சேர்ந்த நாகசாமி என்பவரின் மகன் என்பதையும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர் வைத்துள்ள பாஸ்போர்ட் போலி என்பதையும் கண்டறிந்ததோடு, சில குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்கிற தகவல்களும் ஏர்போர்ட் அத்தாரிட்டி அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து முறையாகப் புகார் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார் ஜெகன். 

 

இதில் கொடுமை என்னவெனில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் வி.ஐ.பி.க்களுடன் நெருக்கத்தை வைத்துக் கொண்டு அக்கட்சிகளின் தலைவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி அக்கட்சியைச் சேர்ந்தவர் எனக் காட்டிக் கொள்பவராம் ஜெகன். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரிடம் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.