Skip to main content

மருத்துவ மாணவியை கர்ப்பமாக்கிய மருத்துவர்!

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

The doctor who made the medical student into struggle

 

சேலத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான மருத்துவர் ஒருவர் திருமண ஆசை காட்டி மருத்துவக் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சேலத்தில் உள்ள ஒரு சித்த மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். 

 

அதில் கூறியிருப்பதாவது: தர்மபுரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எலும்பியல் துறை மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். சமூக வலைதளம் மூலம் கடந்த 2018ம் ஆண்டு அவர் எனக்கு அறிமுகம் ஆனார். எங்களுக்குள் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அவருடைய குடும்பத்தினரிடமும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். 

 

எங்கள் நட்பு காதலாகி திருமணம் வரை சென்றது. திருமணம் செய்வதாகக் கூறி தமிழ்ச்செல்வன் பலமுறை என்னுடன் உறவு கொண்டார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் ஆனது யாருக்கும் தெரியக்கூடாது என்று கூறி என்னை கட்டாயப்படுத்தி கர்ப்பத்தை கலைக்க வைத்துவிட்டார். 

 

இந்நிலையில் திடீரென்று தமிழ்ச்செல்வன் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இது தொடர்பாக அவரிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது. 

 

இந்தப் புகாரில் முகாந்திரம் உள்ளதை அடுத்து மருத்துவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடைய பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்