Skip to main content

6 பேரை கொன்ற யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

dharmapuri elephants moved krishnagiri andhra thirupattur return

 

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கடந்த 6 ஆம் தேதி கிருஷ்ணகிரி நகருக்குள் நுழைந்த இரண்டு ஆண் யானைகள் அங்கு தேவசமுத்திரம் ஏரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2  நாட்களாக முகாமிட்டிருந்தன. அப்போது கிருஷ்ணகிரி சம்பந்த மலைக்கு சென்று அங்கு ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீன் குத்தகைக்காரரான பெருமாள் என்பவரை மிதித்துக் கொன்றன.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக இறங்கினர். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மகாராஜா கடை அருகே உள்ள மூளைக்காடு பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைகளை அங்கிருந்து நரக பகுதி காப்புக்காடு வழிய பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்புங்குருத்தி வனப்பகுதிக்கு விரட்டினர். பின்னர் ஆந்திராவுக்கு சென்ற இரண்டு ஆண் யானைகளும் அங்கு மல்லனூர் பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு பணிக்காக சென்ற 3 பெண்களை தாக்கியது. இதில் உஷா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்து குப்பம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வனத்துறையினருடன் இணைந்து கிராம மக்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டபோது சிவலிங்கம் என்பவர் உயிரிழந்தார்.

 

அதைத் தொடர்ந்து ஆந்திர வனத்துறையால் வளர்க்கப்படும் கணேஷ் மற்றும் ஜெயித்து ஆகிய இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து ஆந்திர வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு நேற்று மாலை விரட்டினர். அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தகரகுப்பம், கரடி குட்டை வழியாக யானைகள் ஆத்தூர் குப்பம், தண்ணீர் பந்தல் பகுதியில் தற்போது தேசிய நெடுஞ்சாலை கடந்து முகாமிட்டுள்ளன. இதை வனத்துறையினர் விரட்டுவதற்கு போராடி வருகின்றனர்.

 

மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் யானைகளை விரட்டும் பணியை ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் யானைகளை விரட்ட தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மண்டலத்தில் உள்ள வேட்டை தடுப்பு பிரிவு காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து மாலைக்குள் வனப்பகுதிக்குள் யானைகள் விரட்டப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.