Skip to main content

பிழைப்புக்காக வந்த பீகார் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! நூற்பாலை ஊழியர்கள் மூவர் கைது! 

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Cruelty to the Bihar girl who came for survival! Three spinning mill employees arrested!

 

பள்ளிப்பாளையம் அருகே, பீகார் மாநில இளம்பெண்ணை மூன்று வாலிபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படையில் தனியார் நூற்பாலை இயங்கிவருகிறது. இந்த ஆலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் வேலை செய்துவருகிறார். நூற்பாலை அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளார். இதே ஆலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பால்ராஜ் (24) என்பவரும் வேலை செய்கிறார். இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் நெருங்கிப் பழகி வந்தனர். 

 

இந்நிலையில், டிச. 19ஆம் தேதி அதிகாலையில், பால்ராஜ் அங்குள்ள அறைக்கு அந்த இளம்பெண்ணை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அவரை அப்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதே நூற்பாலையில் வேலை செய்துவரும் தனது நண்பர்கள் பிரதீப்குமார், மனோஜ்குமார் ஆகிய இருவரையும் அங்கு வரவழைத்த பால்ராஜ். பின்னர் மூவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணைக் கூட்டாக வன்கொடுமை செய்துள்ளனர். 

 

இதனால் அந்த இளம்பெண் மயக்கமடைந்தார். பின்னர் வாலிபர்கள் மூவரும் அவரை அந்த அறையிலேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். மயக்கம் தெளிந்து எழுந்த அவர், இதுகுறித்து நூற்பாலை மேலாளரிடம் கூறினார். 

 

அவர் அளித்த ஆலோசனையின்படி, இதுகுறித்து இளம்பெண் வெப்படை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பால்ராஜ், பிரதீப்குமார், மனோஜ்குமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்