Skip to main content

அரசுப் பணத்தில் அதிமுகவுக்கு விளம்பரமா..? - திமுக திடீர் ஆர்ப்பாட்டம்!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

marakkanam

 

தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரிசுத் தொகுப்பாக 2,500 ரூபாய் பணமும் அதனுடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்டவற்றையும் வழங்கிவருகிறது.

 

இந்தத் தொகுப்புகள் நேற்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. 'அரசின் பரிசுத் தொகுப்பினை வழங்குவதில், எந்த அரசியல் சார்பும் இருக்கக் கூடாது' என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மரக்காணம் பகுதியில் உள்ள ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளின் முன்பும் கூட்டுறவுச் சங்கத்தின் பெயரில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் அரசு முத்திரை இல்லை. மேலும், அதில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்ட அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

 

இதைக்கண்டு கோபம் அடைந்த திமுகவினர் மரக்காணம் நகரச் செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு மரக்காணத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

 

அந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினார்கள். இதனால், சில இடங்களில் திடீரென்று பேனர்கள் அகற்றப்பட்டன. இது சம்பந்தமாக பேனர் வைத்த அரசு அலுவலர்கள் அல்லது அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மரக்காணம் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர். இதனால், மரக்காணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்