Skip to main content

முறையற்ற உறவு; காதலனை கொடூரமாகக் கொன்ற பெண்!

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

Chennai woman arrested by police in her boy friend passes away case

 

சென்னை, பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41), திருமணமாகாதவர். சென்னை, கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்தவர் காவியா(42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). காவியாவுக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மற்றும் மகன்களை பிரிந்து காவியா தனியாக வசித்து வருகிறார்.  

 

பிரகாஷும், காவியாவும் கடந்த மூன்று வருடங்களாக ஓட்டேரி பகுதியில் உள்ள ஒரு அப்பளம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளனர். முதலில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பிறகு அது உறவாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் பல முறை பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். 

 

இந்நிலையில், கடந்த 8ம் தேதி காலை பெரியமேடு, ஆர்.எம். சாலையில் உள்ள ஒரு விடுதிக்கு இருவரும் தனிமையில் இருக்க சென்றுள்ளனர். அந்த விடுதியில் அறை எடுத்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். பிறகு இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது காவியா வேறு ஒருவருடன் பழகி வந்தது தொடர்பாக பிரகாஷ் அவரிடம் கேட்டுள்ளார். இதில் மது போதையில் இருந்த இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த காவியா, பிரகாஷை சுவற்றில் மோதியுள்ளார். பிறகு பிரகாஷை படுக்கையில் தள்ளி அவர் முகத்தில் தலையணை வைத்து அழுத்தியுள்ளார். இதில் பிரகாஷ் மூச்சு பேச்சின்றி இருந்துள்ளார். 

 

பிரகாஷின் நிலையைக் கண்ட காவியா பயந்துபோய், உடனே விடுதி அறையிலிருந்து கீழே இறங்கி வந்து விடுதி மேலாளர் கபீரிடம், “என்னுடன் வந்தவர் அதிக மது குடித்து மயங்கி விட்டார் எனக்கு பயமாக இருக்கிறது” என சொல்லியுள்ளார். உடனடியாக கபீர் அறைக்குச் சென்று பிரகாஷை பார்த்துள்ளார். அங்கு அவர் மூச்சு பேச்சின்றி அசைவில்லாமல் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கபீர், பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வந்து பார்த்த போது பிரகாஷ் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பினர்.  பின் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தங்களது விசாரணையை துவங்கினர். 

 

இதற்கிடையில் பிரகாஷின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தது. அதில், பிரகாஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது என்றும், அவரது முகத்தில் ஏதோ வைத்து அழுத்தப்பட்டுள்ளது என்றும் அதனாலேயே மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், உடனடியாக சந்தேக மரணம் என பதிந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவருடன் அறையிலிருந்த காவியாவை பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸின் விசாரணையில், காவியா அறைக்குள் அவர்களாக நடந்த அனைத்தையும் காவல்துறையிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காவியாவை கைது செய்து மேல் விசாரணை செய்துவருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.