Skip to main content

நிலத்தகராறில் கே.சி.வீரமணி மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை! – மேல்முறையீட்டு வழக்கு முடித்து வைப்பு!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020

 

CHENNAI HIGHCOURT

 

நிலத்தகராறில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடானது, தனிப்பட்ட விவகாரம் என்பதால், அதுதொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுந்தர்ராஜன் என்பவருக்குச் சொந்தமான,  ஏறத்தாழ 7 ஏக்கர் நிலத்துக்கு, காட்பாடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் குத்தகை பெறுகின்றனர். பின்னர் அந்த இடத்தை விற்பனை செய்ய சுந்தர்ராஜன் முடிவு செய்தபோது, ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன், ஆந்திராவைச் சேர்ந்த பிரம்மானந்தம், சத்யநாராயணா ஆகியோர் இணைந்து வாங்கியுள்ளனர்.

நிலத்தை மேம்படுத்தி, கட்டுமானப் பணிகளைச் செய்து கொடுப்பதற்காக, 65 கோடி ரூபாய் தருவதாக, காட்பாடியைச் சேர்ந்தவர்களுடன், ஆந்திராவைச் சேர்ந்த இருவரும் ஒப்பந்தம் போட்டுள்ளனர். பின்னர், இந்த நிலத்தில் ஒரு பகுதியை, தமிழக அரசு பொதுப் பணித்துறை ஒப்பந்தக்காரரான சேகர் ரெட்டி வாங்கியபின்னர், 13 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு, மீதமுள்ள 52 கோடி ரூபாயைத் தராமல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில்,  தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இருப்பதால், அவர் மீதும், சேகர் ரெட்டி மீதும் நடவடிக்கை கோரி, வேலூர் மாவட்ட காவல்துறையிடம், ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக,  தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், அரசுத் தலைமை கொறடா, தமிழக டி.ஜி.பி ஆகியோரிடம், இருவரும் புகார் அளித்தனர்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க, காவல்துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை,  தனி நீதிபதி ஜூன் 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தார்.

 

Ad

 

அந்த உத்தரவை எதிர்த்து ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. அவர்கள் பிறப்பித்த உத்தரவில், நிலம் தொடர்பான விவகாரத்தில், அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்ட முறையில்தானே தவிர, அரசு ரீதியாகவோ அல்லது அமைச்சர் என்ற அடிப்படையிலோ இல்லை என்பதால், அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க, அரசின் முன்அனுமதி தேவையில்லை என்றும், அதனால் அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

அதுபோல,  அமைச்சர்  வீரமணிக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர்வதா, அல்லது ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி செயல்படுவதா என்பது குறித்து, மேல்முறையீட்டாளர்கள் முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்