
தமிழ்நாட்டில் கடந்த வாரம் பெய்த வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு பெரிய அளவில் இருந்தது. இந்த அதீத கனமழை காரணமாக ஒருவாரத்திற்கும் மேலாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் முழுவதுமாக வடியாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மழை பாதிப்பை ஆய்வுசெய்ய மத்திய அரசு நியமித்த குழுவினர் நேற்று (22.11.2021) காலை சென்னையில் தங்களுடைய ஆய்வை தொடங்கினர். மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சுக்லா தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை செய்தார்கள். இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை மத்திய குழுவினர் ஆய்வுசெய்துவருகிறார்கள். ஆய்வுக்குழுவினர் மழை பாதிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.