Skip to main content

பதவி நீக்க விவகாரம்: 34 ஒன்றிய அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள்? - பரபரக்கும் போஸ்டர்கள்

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

central government minister poster for case related poster

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டு இருந்தது

 

இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் ஆளுநரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகவும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டதை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ஆளுநர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

முன்னதாக செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்த ஆளுநரின் அறிவிப்பை கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், தற்போது மத்திய அமைச்சரவை பட்டியலில் இருக்கக்கூடியவர்களில் 77 பேரில் 34 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், எந்தெந்த அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் தற்போது நிலுவையில் இருக்கின்றன என்கின்ற தகவலோடு சென்னையின் பிரதான இடங்களில் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்