Skip to main content

58 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கூட்டுறவு சங்க கணக்காளர் கைது!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Accountant of cooperative society arrested in 58 crore rupees fraud case!

 

சேலத்தில் 58 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அமுதசுரபி கூட்டுறவு சங்க கணக்காளரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டினம் முல்லை நகரைச் சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர், தன் உறவினர்கள் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலத்தில் அமுதசுரபி கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், கூட்டுறவு சங்க விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களிலும் இதன் கிளைகளைத் தொடங்கி நடத்தி வந்தனர்.

 

இந்த சங்கத்தில் குறுகிய கால முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை சங்க நிர்வாகிகள் வெளியிட்டனர். இதை நம்பிய ஏராளமான முதலீட்டாளர்கள், இந்த சங்கத்தில் முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் முதலீட்டாளர்களுக்கு அசல் மற்றும் வட்டித் தொகையைத் தராமல் சங்கத்தினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். தான் 2.92 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்ததாகவும், அந்தப் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

 

இதுகுறித்து ஆய்வாளர் சித்ரா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். முதல்கட்ட விசாரணையில், 1000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று சுமார் 58 கோடி ரூபாய்க்கு மேல் அமுதசுரபி கூட்டுறவு கடன் சங்கம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அமுதசுரபி கூட்டுறவு சங்கத்தின் தலைமையிடம் மற்றும் அனைத்து கிளைகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த ஜெயவேலை கடந்த மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மற்றவர்களைத் தேடி வந்தனர்.

 

இந்நிலையில், அமுதசுரபி கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த எடப்பாடி அருகே உள்ள எரப்பட்டிரெட்டியூரைச் சேர்ந்த கண்ணன் (27) என்பவரை காவல்துறையினர் இரு நாள்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒரு அலைப்பேசி கைப்பற்றப்பட்டுள்ளது. அவரை, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த மோசடி தொடர்பாக தங்கபழம், சரண்யா, பிரேம் ஆனந்த் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.