Skip to main content

சதித்திட்டம் தீட்டிய இளைஞர்கள்; போலீஸ் விசாரணையில் பகீர் - பொள்ளாச்சியில் பரபரப்பு!

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

2 people arrested in connection with  his friend case in Pollachi

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே அமைந்துள்ளது எஸ். சந்திரபுரம். இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் அருண்கார்த்திக். 26 வயதான இவர் தனது படிப்பை முடித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.இந்நிலையில், அருணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகிய இரண்டு பேர் நண்பர்களாக இருந்தனர்

 

மேலும், இவர்கள் மூவரும் சேர்ந்து தனியாக தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இவர்களுக்குள் காலப்போக்கில் சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அருணுக்கும் சூரியபிரகாஷிற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இத்தகைய சுழலில், கடந்த 10 ஆம் தேதியன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற அருண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அருண்கார்த்திக்கை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, உடனடியாக பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோர் தன்னுடைய மகனை காணவில்லை என புகார் அளித்தனர்.

 

அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் காணாமல் போன அருண்கார்த்திக் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், அருணின் நண்பர்களான சூரியபிரகாஷ் அரவிந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அருண் காணாமல் போனதற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர்களை அனுப்பிவிட்டனர். இத்தகைய சூழலில், செல்போன் சிக்னல் தொடர்ந்து ஒரே இடத்தை காண்பித்து வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சூரியபிரகாஷ் அரவிந்த் ஆகியோரை மீண்டும் அழைத்து போலீஸ் பணியில் விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே, போலீசாரிடம் அவர்கள் சொன்ன தகவல்கள் முன்னுக்கும் பின் முரணாக இருந்துள்ளது. ஒருகட்டத்தில், இதுக்குமேல் தாக்கு பிடிக்க முடியாத இருவரும், போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளனர்.

 

கடந்த 10 ஆம் தேதியன்று அருண்கார்த்திகை செல்போனில் தொடர்புகொண்ட சூரியபிரகாஷ், அவரை மது அருந்த அழைத்துள்ளார். அப்போது, அருண், சூரியபிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகிய மூவரும் சேர்ந்து எஸ். சந்திரபுரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு அருகில் மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நேரத்தில், இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, தலைக்கேறிய போதையில் இருந்த சூரியபிரகாஷும் அரவிந்தும் சேர்ந்துகொண்டு அருண் கார்த்திகை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், இதில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சூரியபிரகாஷும் அரவிந்தும் சேர்ந்து அருணின் உடலை அங்கேயே புதைத்துவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதன்பிறகு, இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட சூரியபிரகாஷ் அரவிந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, பண தகராறில் நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.