வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் முடிந்த நிலையில், மனு மீதான பரிசீலனையும் நடந்து முடிந்துவிட்டது. திமுக ஏற்கனவே சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தொகுதியில் தேர்தல் பணியை துவங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்காக பிரச்சாரம் செய்ய அதிமுகவில் இருந்து பிரமாண்ட குழு அமைத்து அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கழக அமைப்பு செயலாளர் மற்றும் அமைச்சரான திண்டுக்கல் சீனுவாசன், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக ஆர்.வைத்தியலிங்கம் எம்.பி, அமைச்சர் தங்கமணி, வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் செங்கோட்டையன், கீழ்வைத்தியான்குப்பம் தொகுதிக்கு எஸ்.பி.வேலுமணி, அணைக்கட்டு தொகுதிக்கு அமைச்சர் சி.வி.சண்முகம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக தலைமை அறிவித்த குழுவில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என 30 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டுள்ளது. இவர்கள் ஜூலை 22- ஆம் தேதி காலை முதல் தொகுதியில் மட்டுமே இருக்க வேண்டும் எனச்சொல்லப்பட்டுள்ளது.