Skip to main content

சீண்டிப் பார்க்க வேண்டாம்... செ.கு.தமிழரசனுக்கு யசோதா எச்சரிக்கை

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

 

காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்க வேண்டாம் என இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யசோதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

இதுதொடர்பாக யசோதா வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

உள்ளாட்சித் தேர்தலில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் கேட்டு இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, அ.தி.மு.க. ஆதரவு கட்சியைச் சேர்ந்த இவர் முதலமைச்சரிடம் நேரில் பேசி இப்பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும். அதற்கு பதிலாக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காகத் தான் அ.தி.மு.க. இவரை பயன்படுத்தியிருப்பதாக கருத்து கூறியிருந்தார். இதில் என்ன தவறு என்று தெரியவில்லை. 

 

Se Ku Tamilarasan - Yashoda



கே.எஸ். அழகிரி கூறிய கருத்துக்கு எதிர்கருத்து கூறாமல், அவரை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டுவது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது அவசியமா எனத் தெரியவில்லை. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. செ.கு. தமிழரசனை விட பலமடங்கு கூடுதலாக பல்வேறு உரிமைகளை தலித் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி பெற்று கொடுத்திருக்கிறது. 1954களிலேயே காமராஜர் முதலமைச்சராக இருந்த போது, இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பரமேஸ்வரன் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதை எவரும் மறைக்க முடியாது.


மேலும், காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களாகவும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தியாகி கக்கன், இளைய பெருமாள், மரகதம் சந்திரசேகர் போன்ற பலர் பொறுப்பு வகித்தது செ.கு. தமிழரசனுக்கு தெரியாமல் இருக்க நியாயம் இல்லை.


என்னைப் போன்ற சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் தான் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் பொறுப்பு வழங்கி பெருமைப்படுத்தியது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


 

 

காங்கிரஸ் இயக்கத்திற்கும், தலித்துகளுக்கும் இருக்கிற உறவு என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. ஆயிரம் செ.கு. தமிழரசன்கள் ஒன்று சேர்ந்தாலும், அந்த உறவில் எந்த விரிசலையும் ஏற்படுத்த முடியாது. அது எக்கு கோட்டை போல் உறுதியாக இருக்கிறது. தலித் சமுதாயத்தை தேசிய அளவில் பாதுகாக்கிற ஒரே இயக்கம் காங்கிரஸ் இயக்கம் என்பது செ.கு. தமிழரசனுக்கு நன்றாகவே தெரியும். இன்றைய சகவாச தோஷத்தின் காரணமாக காங்கிரஸ் மீது அவரும், அவரது இயக்கத்தினரும் சேற்றை வாரி இறைக்க முயற்சிப்பதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
 

எனவே, இனியும் காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்க வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் காங்கிரஸ் கட்சி மீது தாக்குதல் தொடுக்கப்படுமேயானால், காங்கிரஸ் கட்சி தோழர்கள் அணிதிரண்டு முறியடிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.