
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (01.06.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில் “இன்றைய தினம் மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூடிப் பல தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதோடு அதிமுகவைப் பற்றி 27வது தீர்மானமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் துரோக அதிமுக என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது துரோக அதிமுக என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அது நாங்கள் (அதிமுக) இல்லை. அது திமுக தான். இந்த நாட்டிற்குத் துரோகம் இளைத்தது.
அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி அவரது மறைவுக்குப் பிறகு நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலும் அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கினோம். சட்ட ஒழுங்கு சிறப்பாகப் பேணி காக்கப்பட்டது. இன்றைய தினம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த 4 ஆண்டுகாலமாக மக்கள் விராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே கிடையாது. தொலைக்காட்சியைத் திறந்தாலும் சரி, பத்திரிக்கை திறந்தாலும் சரி இந்த செய்திதான் பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சிதான் துரோக ஆட்சி என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
கல்விக் கொள்கையில் ஏன் திமுக கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியல் கொண்டு வந்திருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் மக்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. மாணவர்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. ஆட்சி அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு மற்றவர் மீது பழி சுமத்துவது தான் திமுகவின் வாடிக்கை. பந்தல்குடி கால்வாயின் நிலை குறித்து தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டீர்கள். இதுவே ஒரு மோசமான ஆட்சி என்பதற்குச் சான்று. அதான் அவர்களுக்கே பிடிக்கவில்லை. முதலமைச்சர் வரும்போது அவருக்கே பிடிக்காமல் தான் திரை போட்டு சாக்கடை கழிவு நீர் வெளியே செல்கின்ற கால்வாயைத் தூர்வாராமல் மிக மோசமாகத் துர்நாற்றம் அடித்துக் கொண்டிருப்பதைப் பொறுக்காமல் திரைப்போடு மறைத்திருக்கிறார்கள். அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் தேமுதிகவோடு சுமுகமான உறவு உள்ளது. எப்படியாவது ஏதாவது பேசி பிரேக் பண்ணலாம் நினைக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது.