
டெல்லி ஜங்க்புரா மதராஸி பகுதியில் வாழும் தமிழர்களின் வீடுகளை இடிப்பதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “டெல்லி ஜங்க்புரா பகுதியில் சுமார் மூன்று தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வரும் மதராஸி முகாமில் உள்ள வீடுகளை கால்வாய் அகலப்படுத்தும் திட்டத்திற்காக இடித்து இன்றைக்கு அந்த மக்களுக்கு உரிய பாதுகாப்போ, உரிய இருப்பிடமே ஒதுக்காமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
எனவே இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம். கால்வாய் அகலப்படுத்துவதற்கு என்று ஒரு திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தால் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவித்து அவர்களை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு மாற்றி அவர்களுக்கு உரிய இருப்பிடத்தை மாற்று ஏற்பாடு செய்து கொடுத்து இருக்க வேண்டும். அவர்கள் அந்த இடத்திலேயே இருக்கும்பொழுது மாற்று ஏற்பாடு எதுவுமே செய்யாமல் அவர்கள் வசித்த வீடுகளை இடிப்பது எந்த வகையிலே நியாயம்?.
எனவே டெல்லி ஆளும் முதலமைச்சரும், ஆட்சியாளர்களும் உடனடியாக மாற்று இருப்பிடத்தையும், வீடுகளையும், வசதிகளையும், ஏற்படுத்தித் தந்து அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. உறுதியாக தமிழர்களுக்காக தேமுதிக துணை நிற்கும், அவர்களுடைய துயர் துடைக்கும் வரை அவர்களுக்காக தேமுதிக நிச்சயமாக குரல் கொடுக்கும். நியாயம் கிடைக்க வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். மதராஸி பகுதி தமிழர்கள் பாதிக்கப்பட்ட அந்த பகுதியில் உடனடி. தீர்வும் கிடைக்க வேண்டும்.